சிவ சேனா யாருடன் கூட்டணி வைத்தாலும் தங்களுக்கு கவலை இல்லை என்றுகூறி காங்கிரஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
சிவ சேனா எம்எல்ஏக்கள் 34 பேர், அதிருப்தி அணியாக பிரிந்து சென்றுள்ள நிலையில், அவர்களை சமாதானப்படுத்த அக்கட்சி முயன்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகா விகாஸ் ஆகாதி கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியே வர வேண்டும் என்பதுதான் அனைத்து எம்எல்ஏக்களின் விருப்பம் என்றால் அது குறித்த பரிசீலிக்க கட்சி தயாராக இருப்பதாகவும் அதற்கு முதலில் அஸ்ஸாமில் இருக்கம் எம்எல்ஏக்கள், மும்பை வந்த அதுபற்றி கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் விவாதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
சிவ சேனாவின் இந்த திடீர் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் மும்பையில் இன்று மாலை நடைபெற்றது. மூத்த தலைவர்கள் ஹெச்.கே. பாடீல், பாலாசாஹெப் தோராட், நானா படோலி, அசோக் சவான் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நானா பட்டோலி, மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கவே சிவ சேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததாகக் குறிப்பிட்டார்.
சிவ சேனாவில் தற்போது நடக்கும் அனைத்துக்கும் காரணம் அமலாக்கத்துறைதான் என தெரிவித்த அவர், பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்புக்கு காங்கிரஸ் தயார் என தெரிவித்தார். மகா விகாஸ் ஆகாதி கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அவர்கள் யாருடனாவது கூட்டணி வைக்க விரும்பினால், அதுபற்றி தங்களுக்கு கவலை இல்லை என நானா பட்டோலி தெரிவித்தார்.
இதனிடையே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீதும் அதிருப்தி எம்எல்ஏக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
முதலமைச்சரை தொடர்பு கொள்ள முடிவதில்லை என்றும், தாங்கள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.