கலவர பூமியான காங்கிரஸ் அலுவலகம்; திடீரென முற்றுகை போராட்டம் நடத்திய தொண்டர்களால் பரபரப்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை மாற்ற கோரி சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினர்  வருகின்ற…

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை மாற்ற கோரி சென்னை
சத்தியமூர்த்தி பவன் முன்பு 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திடீரென
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர்  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும்
என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொறுப்பாளர் குண்டு ராவ் முன்னிலையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், முன்னாள்
இந்நாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வருகை
புரிந்தனர். அப்போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கும் கே.பி.கே ஜெயக்குமார் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 8 வட்டார தலைவர்களை காரணம் இன்றி பதவி நீக்கம் செய்து அவருக்கு சாதகமான புதிய நிர்வாகிகளை நியமித்ததாக குற்றம் சாட்டி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் திடீரென முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர்
செல்வப் பெருந்தகை, முன்னணி தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மற்றும் மேலிட
பொறுப்பாளர் தினேஷ் குண்டூர் உள்ளிட்டோர் சத்தியமூர்த்தி பவன் உள்ளே வரும்போதும் போராட்டக்காரர்கள் மாவட்ட தலைவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை மாற்றம் செய்ய
வேண்டும் என கேஎஸ் அழகிரியிடம் மனுவும் அளிக்கப்பட்டது. அத்தோடு போராட்டம்
நடத்துவர்களிடம் தலைவர் கே அழகிரி மற்றும் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு
ராவ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்திய நிலையில்,ஆலோசனைக்
கூட்டம் முடியும் தருவாயில் கே எஸ் அழகிரி புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் திடீரென சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் கூடியிருந்த
போராட்டக்காரர்கள் மற்றும் சிலரிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த பைப்
மற்றும் கற்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி அது அடிதடியாக மாறி கலவரமானது.
இந்த திடீர் கலவரத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ்
நிர்வாகிகளான ராபர்ட் ஜோஸ்வா மற்றும் டேனியல் ஆகிய மூன்று நிர்வாகிகளுக்கு
ரத்தக் காயம் ஏற்பட்டது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.