ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகைத் தந்தனர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதையடுத்து கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தற்போதும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர். அப்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக இருப்போம் என்ற வாசகத்துடன் கூடிய பாதகைகளுடன் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்கு வந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா