சுவருக்காக திமுக அதிமுக இடையே ஏற்பட்ட மோதல் – பொதுமக்கள் கோரிக்கை!

இரு கட்சித் தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயன்றதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

 

சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினர் இடையே ஏற்பட்ட மோதலால் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு சுவரில் ஏற்கனவே அ.தி.மு.க-வின் வி.எஸ்.பாபு ஆதரவாளர்கள் தங்களது கட்சியின் விளம்பரங்களையும், தலைவர்களின் படங்களையும் வரைந்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், அதே சுவரில் தி.மு.க-வினரும் தங்கள் கட்சி விளம்பரங்களை எழுத முன்வந்தனர். இதை அ.தி.மு.க-வினர் கடுமையாக எதிர்த்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி, கைகலப்பாக மாறியது.

மேலும் இரு கட்சித் தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயன்றதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியந்தோப்பு மாவட்ட துணை ஆணையர், மோதலில் ஈடுபட்டிருந்த இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருதரப்பினரும் அமைதி காக்கவும், சுவரில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக ஒருமித்த கருத்துக்கு வரவும் உடன்பட்டனர்.

இந்நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் ஒட்டுவது போன்ற விவகாரங்களில் அரசியல் கட்சிகளிடையே மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அமைகின்றன. தேர்தல் ஆணையம் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Puliyanthoppu

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.