குற்றாலத்தில் அரசு நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்காததால் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்!

குற்றாலத்தில் அரசு நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்காததால் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.  தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள குற்றால அருவிகளின் பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழக சுற்றுலாத் துறை…

குற்றாலத்தில் அரசு நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்காததால் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. 
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள குற்றால அருவிகளின் பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழக சுற்றுலாத் துறை மூலம் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  அதன் முதற்கட்டமாக ரூ.11 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று குற்றாலம் பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது.  தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.  இதில் ஏராளமான அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் மக்கள் பிரதிநிதிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்காததால் அவர்கள் வரவில்லை என கூறப்பட்டது.  மேலும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அந்த புகாரில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரான பழனிநாடார் குற்றால வளர்ச்சிக்காக சட்டசபையில் நிதி கோரி பேசியதை தொடர்ந்து தமிழக சுற்றுலாத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கு அவரை அழைக்காதது மிகுந்த வேதனையாக உள்ளது எனவும்,  அழைப்பு விடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
– அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.