சென்னையில் பிரபல உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி வழங்கப்பட்டதாக வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஜூனியர் குப்பண்ணா உணவகத்திற்கு விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் உணவருந்த சென்றுள்ளார். இரவு 9:30 மணி அளவில் உணவகத்திற்கு சென்ற கார்த்தி, சிக்கன் பிரியாணி, ஆட்டுக்கால் சூப், இட்லி, கலக்கி உள்ளிட்ட உணவு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
இதில் அந்த உணவகம் வழங்கிய சிக்கன் பிரியாணியில் கெட்டுப்போன இறைச்சி இருந்ததை கண்டு கார்த்தி மற்றும் அவரது மனைவி ஸ்ருதி அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்ட போது, முதலில் தாங்கள் வழங்கிய பிரியாணி கெட்டு போகவில்லை என தெரிவித்தனர். பின்பு பிரியாணி கெட்டு போனதை அவர்களும் ஒப்பு கொண்டதாக கார்த்தி தெரிவித்தார். மேலும், இந்த பிரச்னையை பெரிதாக்காமல், விட்டு விடும் படியும், அதற்கு பதிலாக வேறு பிரியாணி தருவதாக சொல்லியதாக அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா என உறுதி செய்யாமல் அது குறித்து விசாரிக்கும் போது பொறுப்பற்று பதில் கூறுவதாகவும் கார்த்தி – ஸ்ருதி தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அந்த உணவை தங்களின் 2 வயது குழந்தை உட்கொண்டிருந்தால் என்னவாகியிருக்கும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த விவகாரம் குறித்து கார்த்தி காவல் துறையிடம் தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறையை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை என கார்த்தி தெரிவித்தார். மேலும், இது குறித்து நேரில் சென்று உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பிரபல உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது







