காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இதேபோல் ஆடவர் பளுதூக்கும் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் என 9 பதக்கங்களை வென்று 8வது இடத்தை பெற்றுள்ளது. 31 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மாத்தம் 71 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இன்று நடந்த லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் 4 தங்கத்தை பெற்று மொத்தம் 10 பதக்கங்களை பெற்றது.
இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சத்யன் மற்றும் ஹர்மீத் தங்களுடைய ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இதனால் இந்தியா அணி 3- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தியது.
2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் தொடரில் டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. தொடர்ந்து 2வது முறையாக காமன்வெல்த் அணி பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இதேபோல் பளுதூக்கும் போட்டியில் ஆடவருக்கான 96 கிலோ எடைப்பிரிவில் விகாஸ் தாக்கூர் மொத்தம் 346 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.