‘பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை’ – சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்குப் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை எனவும், பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு இறுதியில் திரைப்படத்துறை…

குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்குப் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை எனவும், பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு இறுதியில் திரைப்படத்துறை துணை நடிகையாக இருந்த 16 வயது மைனர் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துக் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, கைது மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் தொடர்பாகச் சாட்சியம் அளித்த ஜெபராஜ் என்பவர் காவல்துறை தரப்பின் இருப்பு சாட்சி என்றும் அவரது சாட்சியத்தைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூ; மாணவர் ஒருவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை’

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, குற்ற வழக்குகள் புலன் விசாரணையில் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என்பதை மறந்து விட முடியாது என்றும் பொதுநலனின் அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக முன் வருவதாகவும் சுட்டிக்காட்டி, காவல்துறையில் இருப்பு சாட்சி என்பதற்காகக் கைது மற்றும் பறிமுதல் தொடர்பாகச் சாட்சியம் அளித்த ஜெபராஜ் சாட்சியத்தை ஒதுக்கி விட முடியாது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் எதிராகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபித்து இருந்தாலும் கூட, தலை மறைவு குற்றவாளியான சரவணன் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார் என்பதும் மனுதாரர்கள் தங்கள் இச்சைக்காகச் சரவணனுக்கு இரையாகி விட்டதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மூன்று ஆண்டுகளாகக் குறைத்துத் தீர்ப்பளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.