ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன், மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராயபேட்டை அரசு மருத்துவ மனையில் 2.76 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் டெலிகோபால்ட் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். மேலும், ரூ.2.35 கோடி மதிப்பிலான நீராவி சலவையாக கட்டிடம் திறந்து வைத்து மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். 2.2 கோடி ரூபாய் மதிப்பிலான அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் பேசியது கண்டனத்துக்குரியது. ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை பற்றி பேசுகிறார். நான் ஆளுநருக்கு சாவால் விடுகிறேன் தூத்துக்குடியில் சென்று இந்த கருத்தை பேச முடியுமா? நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று ஆளுநர் பேசியிருந்தது மாநில சுய ஆட்சிக்கு இழுக்கு என்று கூறினார்.
இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடிமையியல் மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஆளுநர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்களை தூண்ட வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது. ஆனால் அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.








