கந்துவட்டி வசூல்; 17 பேர் அதிரடி கைது!

கோவை மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை கந்துவட்டி தலைதூக்கியுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்தி நாராயணன் தலைமையில் 6…

கோவை மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கந்துவட்டி தலைதூக்கியுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்தி நாராயணன் தலைமையில் 6 துணை கண்காணிப்பாளர்கள், 20 ஆய்வாளர்கள் மற்றும் 80 காவலர்கள் எனத் தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சுமார் 41 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் அதிரடி சோதனையில், பொதுமக்களிடம் ஆவணங்களை வாங்கி வைத்து கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த 17 பேர் பிடிபட்டனர். அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 1 கோடியே 29 லட்சம் ரூபாய் ரொக்கம், 379 பத்திரங்கள், 79 உறுதிமொழி பத்திரம், 127 நிரப்பப்படாத காசோலைகள், 54 வெற்று காகிதத்தில் கையெழுத்திட்ட பத்திரங்கள், 48 ஏ.டி.எம் அட்டைகள், 211 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் ஆதார் அட்டைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘கனியாமூர் மாணவி மரண வழக்கு; நாளை விசாரணை’

தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி காரணமாகப் பல உயிரிழப்பு  சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கந்து வட்டி கும்பலைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருப்பதன் அடிப்படையில், இந்த அதிரடி சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

கடந்த ஒரு வாரக் காலமாகத் தனிப்படை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து அதன்பிறகு தற்போது கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், கைது செய்யப்பட்ட நபர்களால் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கந்து வட்டி தொடர்பாகப் பொதுமக்கள் துணிச்சலுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் புகார் அளிப்பவர்கள் விபரம் வெளியிடப்படாது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.