கோவை சம்பவம்: உரிய நடவடிக்கை எடுக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…

கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட
சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சிதம்பரம்
நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியில் அம்பேத்கர் நூலகம் ஒன்றினை திறந்து வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், வருகிற 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்மொழிகிறது.
முன்னாள் அமைச்சர்கள் மீது வருமான வரித் துறை சோதனை, உரிய துறையினர்
சட்டப்பூர்வமான பணியை செய்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன். புலனாய்வுக்கு
பின்னர் தான் இது குறித்து கருத்து சொல்ல முடியும்.

மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருப்பது குறித்து மின்சார வாரிய துறை அமைச்சர்
செந்தில் பாலாஜி நீண்ட, நெடிய விளக்கத்தை தந்திருக்கிறார். அதனால் ஏழை மக்கள்
பாதிக்கப்பட மாட்டார்கள் என்கிற உறுதியை தந்திருக்கிறார். தவிர்க்க இயலாத
நிலையில் இந்த மின் கட்டணம் உயர்வு உள்ளது. அரசு தரப்பில் மறு பரிசீலனைக்கு
உட்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில் சீரமைக்க வேண்டும்
என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைக்கிறது.

முரசொலி நாளிதழில் மின்சார உயர்வுக்கு கே.பாலகிருஷ்ணன் பற்றி கண்டனம்
தெரிவித்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தோழமைக்
கட்சிகள் தோழமையோடு சொல்லப்பட்ட கருத்தாக நான் பார்க்கிறேன். ஜனநாயக உணர்வை மதிக்கின்ற வகையில், சனாதன சக்திக்கு இடம் கொடுக்காமல்
கட்டுக்கோப்பாக கூட்டணியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற
பொறுப்புணர்வோடும் இதை விமர்சனமாக கருதுகிறேன்.

பெரியார் பெயரில் உணவகம் அமைக்கக் கூடாது என்று கோவையில் இந்து முன்னணியினர் உணவகத்தை அடித்து நொறுக்கினர். பெரியார் மண்ணில் இது போன்ற எதிர்ப்புகள் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் இங்கு சனாதன சக்திகள் அந்த அளவுக்கு வன்முறையை கட்டவிழ்த்து, திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை இதை உணர்த்துகிறது. அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற வன்முறையை தூண்டும் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

ராகுல் காந்தி நடைப்பயணம் நல்ல நோக்கம், நல்ல முயற்சி மக்களை சாதியின்
பெயராலும், மதத்தின் பெயராலும் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக உள்ளிட்ட
சங்பரிவார்களை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதற்காக ஒரு அரசியல் பயணம், இந்த பயணத்தை அரசியல் ரீதியான கட்சி அடிப்படையில் அணுகாமல் சனாதான சக்தியிடம் இருந்து அரசியலமைப்பு சட்டத்தையும், தேசத்தையும் காப்பாற்றுவதற்கு ராகுல் நடைப்பயணம் இருக்க வேண்டும் என சுட்டி காட்டுகிறேன். இந்த பயணம் சனாதான சக்திகளை தனிமைப்படுத்தி ஜனநாயக சக்திகள் ஐக்கியபடுத்த பெரும்
பயனாக அமையும் என்று கருதுகிறேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.