கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோயம்புத்தூர் சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அப்போது, கோவை சம்பவம் தொடர்பாக விசாரணை நிலவரம், கைது நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

https://twitter.com/CMOTamilnadu/status/1585174374206046209

இதைத்தொடர்ந்து. இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கோவை மாநகரின் பாதுகாப்பினை வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய 3 பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க ஒரு சிறப்பு காவல் படையை உருவாக்கவும், கோவை நகரின் முக்கிய பகுதிகளில் கூடுதல் நவீன கண்காணிப்பு கேமராக்களை விரைவில் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.