கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தாசம்பாளையத்தை சேர்ந்தவர் முகமது அலி. லாரி ஓட்டுநரான இவர் இன்று காலையில் தனது மகள் அஸ்னியா, ஆசிக் ரஹ்மான் ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் மீனாட்சி பேருந்து நிலையம் பகுதியிலுள்ள ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்து வந்திருந்தார்.
இரு சக்கர வாகனத்தை கடையின் வாயிலின் அருகே நிறுத்திவிட்டு தனது பிள்ளைகளை பைக்கில் இருந்து முகமது அலி இறக்கி விட்டுகொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக காரமடை செல்வதற்காக பிக்கப் வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. வாகனத்தை முகமது சலீம் என்பவர் ஓட்டி வந்துகொண்டிருந்தார்.வாகனமானது மீனாட்சி பேருந்து நிலையம் பகுதியில் வந்தப்போது சலீமிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் நின்றிருந்த முகமது அலி மற்றும் அவரது பிள்ளைகள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் காயமடைந்த அவர்களை அக்கம்பக்கதினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேந்தன்







