அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால், அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில், 85 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி மாயமாகியுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசின் நடவடிக்கையால், 7 ஆண்டுகளுக்கு பின்னர், அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தின் முதல் அலகு, மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். முந்தைய அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக, வடசென்னை அனல்மின் நிலையத்தில் பதிவேட்டில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பதாகவும், ஆனால், இருப்பில் இல்லை என்றும் அவர் கூறினார்.
அதிமுக அரசின் தவறான நிர்வாகத்தின் காரணமாக மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.









