சென்னை எண்ணூரிலிருந்து ஆந்திராவுக்கு பாலிகீட்ஸ் புழுக்களை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆறும் கடலும் சேரும் இடத்தில் பாலிகீட்ஸ் புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இந்த புழுக்களை அரசின் உத்தரவை மீறி சிலர் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதாக கும்மிடிபூண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நேரு நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அதிக அளவிலான பாலிகீட்ஸ் புழுக்களை ஆந்திராவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பாலிகீட்ஸ் புழுக்களை பறிமுதல் செய்து எண்ணூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பாலிகீட்ஸ் புழுக்கள் கடல்வாழ் உயிரினங்களின் பல் உயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது. இந்த வகை புழுக்கள் பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால், மீன்களுக்கு இறையாக கொடுக்கப்படுகிறது. பாலிகீட்ஸ் புழுக்கள் கடத்தப்படுவதால் கடலோர நிலப்பகுதிகளின் வளம் அழியும் நிலை உருவாகும். இதன்காரணமாக பாலிகீட்ஸ் புழுக்களை சேகரிப்பது கடலோர வாழ்விடங்களை சேதப்படுத்தும் வகையில் குற்றமாகும்.







