ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவதால், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துக்கிறார். இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஊரடங்கில் எந்தெந்த செயல்பாடுகளுக்கு கூடுதல் தளர்வு அளிக்கலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில், தற்போது பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 11 மாவட்டங்களில் பேருந்து சேவைகளை தொடங்குவது குறித்தும், ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
இது தவிர, கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான கால அளவு நீட்டிப்படுவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனைக்குப் பின்னர், இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.







