சுதந்திர தினத்தின் பவள விழாவினை திமுக அரசு கொண்டாடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமிதம் அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றுகிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். இதையடுத்து சிவானந்தா சாலையில் அமைக்கப்பட்டுள்ள 75வது ஆண்டு சுதந்திர தின நினைவுத்தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துவோம் எனக் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த நேரங்களில் எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகளை வணங்கும் பொருட்டு கம்பீரமிக்க நினைவுத் தூண் எழுப்பி சிறப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் அனைவரும் பாராட்டும் வகையில் விரைந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை சுதந்திர தினத்தன்று தெரிவித்துக் கொள்வதில் பூரிப்படைகிறேன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.