இந்திய அளவில் ஏற்றுமதியில் 3வது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டுவருவதே லட்சியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல ஏற்றுமதிக்கான சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது முடியும் என காத்திருத்து முதலமைச்சரை ஒருநாள் ஓய்வெடுக்கவிடாமல் தன் துறையில் அதிக கவனம் செலுத்தி இந்த நிகழ்வை தா.மோ.அன்பரசன் நடத்தியுள்ளார். அதன் மூலம் அவர் எந்தளவுக்கு சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.இந்திய அளவில் 35,000க்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் இந்த கூட்டமைப்பில் 5,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது பெருமையாக இருப்பதாக கூறிய முதலமைச்சர், இந்திய பொருளாதாரத்திற்கு தேவையான ஏற்றுமதியில் தென்மண்டலம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அதிலும் குறிப்பாக தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், அதனை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது லட்சியம் எனவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்திருப்பதாகவும், ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.