சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார்.
சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து சிகிச்சை முறை குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர், சேலம் உருக்காலையில் இருந்து கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ஆக்சிஜன் வழங்கும் நடைமுறைகள் குறித்து உருக்காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, முழுமையாக நடந்து சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நோயாளிகளின் உடல்நலனை சிறப்பாக கவனித்து, கொரோனா தொற்றில் இருந்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.







