தமிழ்நாடு அரசின் 7 இலக்குகளை முக்கியப்படுத்தி கொள்கைகளை தயார் செய்ய வேண்டுமென வளர்ச்சி கொள்கை குழுவுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். கு.சிவரமன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இக்குழுவில், ஜெயரஞ்சனுக்கு விவசாய கொள்கை மற்றும் திட்டமிடுதல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற உறுப்பினர்களுக்கு கல்வி, சுகாதாரம் என பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, வளர்ச்சிக் கொள்கைக் குழுவினர் இன்று சந்தித்துப் பேசினர். பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட வரைவு திட்டம் குறித்து முதலமைச்சருடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஏற்கனவே வளரும் வாய்ப்புகள், மகசூல் பெருக்கம், குறையாத தண்ணீர், உயர்தரக்கல்வி & மருத்துவம், எழில்மிகு மாநகரம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு, அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு என்ற 7 இலக்குகள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த இலக்குகளை முக்கியப்படுத்தி கொள்கைகளை தயார் செய்ய மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவிற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல, கல்வி, மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.







