பிரதமரை சந்தித்து ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க, அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை டெல்லி செல்கிறார்.
தமிழக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை மெரினாவில் உலகத் தரமிக்க நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க, அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாட்கள் பயணமாக டெல்லிக்கு நாளை புறப்பட்டு செல்கிறார்.
பிரதமரை சந்திக்கும் போது, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, மற்றும் புயல் பாதிப்புகளை சீர்செய்ய தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும், பிரதமரிடம் முதலமைச்சர் வழங்க உள்ளார்.







