பிரதமர் மோடிக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அயோத்திக்குச் சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் பயணித்த சபர்மதி ரயிலின் ஒரு…

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் அயோத்திக்குச் சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் பயணித்த சபர்மதி ரயிலின் ஒரு பெட்டி, குஜராத்தின் கோத்ராவில் 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி எரிக்கப்பட்டது.

இதையடுத்து குஜராத்தின் பல்வேறு இடங்களிலும் வன்முறை வெடித்தது. அஹமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த கலவரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி ஈஷான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உள்பட பலர் சதி திட்டம் தீ்ட்டியதாக ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி உள்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி வழக்கில் இருந்து விடுவித்தது.

இதை எதிர்த்து ஜாகியா தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றமும், 2017ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்த ஜாகியா 2018ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கன்வில்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.