திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 35வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியதோடு ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் விசா காலம் முடிந்தும், அனுமதியின்றி இந்தியாவில் நுழைந்த மற்றும் வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர்கள் என பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 150 வெளிநாட்டினர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்கள் குற்றம் நிரூபிக்கப்படாமல் இங்கு பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை விடுவிக்கக்கோரி கடந்த மே மாதம் 20ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசுக்கு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் போராடும் இலங்கைத் தமிழர்கள் இதுவரை உண்ணாவிரத போராட்டம், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், பாடைகட்டி போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் தமிழக அரசு இதுவரை போராடி வரும் இலங்கைத் தமிழர்களிடம் விசாரணை ஏதும் நடத்தவில்லை என சொல்லப்படுகிறது. இதுகுறித்து எவ்வித உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை என குற்றம்சாட்டி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் இலங்கை தமிழர்கள் 4 பேரும் மரத்தின் மேல் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதில் உமா ரமணன் என்கிற இலங்கை தமிழர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.