வத்தலக்குண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கிடையே மோதல்

வத்தலக்குண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால், இரு தரப்பும் மாறி மாறி சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் உலகநம்பி (50).…

வத்தலக்குண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால், இரு தரப்பும் மாறி மாறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் உலகநம்பி (50). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நில மீட்புக் குழு மாநில துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில்நேற்று இரவு, கட்சி அலுவலகம் முன்பாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் உலகநம்பி ஆதரவாளர் தங்கமுருகன் (45) என்பவருக்கும், மாவட்ட துணைச் செயலாளர் முருகன் ஆதரவாளரான ஆல்பர்ட் (45) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.


அப்போது, அங்கு இருந்த உலகநம்பி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவாட்ட துணைச் செயலாளர் முருகனின் ஆதரவாளரான ஆல்பர்ட்டை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்ட் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாநில நிர்வாகியான உலகநம்பியை குத்தியதாக கூறப்படுகிறது. அப்போது உலகநம்பி அருகில் இருந்த கட்டையால் ஆல்பர்ட்டை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த உலகநம்பி வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் ஆல்பர்ட் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்த உலகநம்பி ஆதரவாளர்கள் ஆல்பர்ட்டை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி வத்தலக்குண்டு காவல் நிலையம் முன்பு பெரியகுளம் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், ஆல்பர்ட்டை தாக்கிய உலகநம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆல்பர்ட் ஆதரவாளர்கள் உலகநம்பி கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், ஆல்பர்ட் ஆதரவாளர்கள் திண்டுக்கல் சாலையில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நம்பி ஆதரவாளர்கள் ஆல்பர்ட் வீட்டை தாக்கினார்கள். இச்சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் வத்தலக்குண்டு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் நிலக்கோட்டை டிஎஸ்பி.முருகன் தலைமையில் இந்தப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகநம்பி என்பவர் ஆல்பர்ட் தரப்பு மீதும், ஆல்பர்ட் என்பவர் உலகநம்பி தரப்பினர் மீதும் இருவரும் வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வத்தலக்குண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

– பரசுராமன்.ப
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.