வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாள்- ராமதாஸ் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை முதல் தினம் தமிழ் புத்தாண்டாக…

வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சித்திரை முதல் தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழக மக்களுக்கு  பாமக நிறுவனர் ராமதாஸ் சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்  வெளியிட்டுள்ள வாழ்தது செய்தியில், சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர்.

சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.

சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும்.

கடந்த ஆண்டின் சித்திரை நாளுக்கு முன்பாகத் தான் நமக்கு சமூகநீதி கிடைப்பதற்கு தடையாக இருந்த அனைத்தும் நீதித்துறையின் சுத்தியலால் தகர்த்து எறியப்பட்டன. இந்த ஆண்டின் சித்திரையில் நமக்கு இனிப்பான செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அது தாமதமாகியுள்ளது.

நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கும் வழிமுறைகள் நமக்குத் தெரியும். சித்திரையில் வசந்தம் வரும்; மகிழ்ச்சி வரும்; கொண்டாட்டங்கள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சமூகநீதி மலரும் என்பதும் உண்மை தான். வெகுவிரைவில் சமூகநீதியைக் கொண்டாடுவதற்கும் அணியமாக இருங்கள்.

அதையும் கடந்து தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.