சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட பயணம் தோல்வியடைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கள்ளச் சாராயம் மற்றும் விஷச் சாராய மரணங்கள், கனிம வளக் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் கொல்லப்படுதல் போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது அமைச்சர்களின் விதண்டாவாத பேச்சுக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் அடாத செயல்பாடுகளை திசை திருப்ப சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்த நிலையில், இந்தச் சுற்றுலாவின் மூலம் 3,233 கோடி முதலீட்டினை ஈர்த்ததாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்து புலகாங்கிதம் அடைந்துள்ளார்.
பத்திரிகைகளில் 9 நாள் சிங்கப்பூர்-ஜப்பான் பயணத்தில். முதலில் 1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வந்தது; பின்னர் 3,233 கோடி என்று வந்தது. மேலும் இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் 1,891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறியுள்ளார். அப்போது, உண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டிய முதலீடு ரூ.1,342 கோடிதான். இதில் எது உண்மை? எதை நம்புவது ?
முதலமைச்சருடைய பேட்டியைப் பார்க்கும் போது, கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு புத்தி எங்கே போயிற்று’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஒம்ரான் நிறுவனம் ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வருகிறது. அவர்களின் இந்திய CEO-க்களை அழைத்து, அவர்களிடமே இந்த முதலீடுகளை சுலபமாகப் பெற்றிருக்கலாம். அதைச் செய்யாமல் முதலமைச்சர் சிங்கப்பூர்-ஜப்பான் வரை சென்றதைத்தான் தோல்வி என்கிறோம்.
கார் தயாரிப்பிற்கு தேவைப்படும் முக்கிய மூலப் பொருளான செமி கண்டெக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை இந்திய வெளிநாட்டு (ஃபாக்ஸ்கான்) கூட்டு நிறுவனம் சுமார் ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் துவக்க இருந்த நிலையில், அந்நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியம் வழங்க, திமுக அரசு மறுத்ததன் காரணமாக, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய இத்தொழிற்சாலை தற்போது குஜராத்திற்கு சென்றுவிட்டது. இவ்வாறு தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை இழந்தால், 2030-ல் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியள் அளவுக்கு உயர்த்துவோம் என்று கூறியது வெறும் வாய்ச்சவடால்தானே.
அதே போல், ஃபாக்ஸ்கான் நிறுவனம் சுமார் ரூ.4,000 கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்கப்பட இருந்த ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலை திமுக ஆட்சியின் பாராமுகத்தினால் கர்நாடகாவிற்கு சென்றுவிட்டது.
அதுமட்டுமல்ல, நமது மாநிலத்தில் பெரு முதலீடுகளை செய்திருக்கின்ற ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் CEO வந்த போது கூட முதலமைச்சர், அவர்களை சந்திக்காததன் விளைவாக, கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் முதலீடுகள் கர்நாடகாவிற்கும், தெலங்கானாவிற்கும் சென்றுவிட்டன.
சுமார் ரூ.9,000 கோடி முதலீட்டை ஈர்த்ததற்கு, தன் முதுகை தானே தட்டிக்கொள்ளும் திராவிட மாடல் முதலமைச்சரின் வாய்ச் சவடால் திறமையை தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம்’ என்பது போல், தமிழ் நாட்டில் தற்போது இயங்கும் பல நிறுவனங்களே தங்கள் முதலீடுகளை வேறு மாநிலங்களில் செய்து வருகின்றன. எனவேதான், இது முதலீட்டை ஈர்க்கும் பயணம் அல்ல, முதலீடு செய்யச் சென்ற சுற்றுலா என்ற சந்தேகம் வலுக்கிறது. துபாய் பயணம் முடிந்து பல மாதங்கள் ஆன பின்பும், சிறு முன்னேற்றம்கூட இல்லையே என்று நான் அறிக்கை வெளியிட்டதும், முன்னெடுப்புகள் நடந்து வருவதாக தொழில் துறை அமைச்சர் பெயரில் பசப்பு வார்த்தைகளால் அறிக்கை விடுகிறார்.
தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க இதுபோல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குப் பயணம் என்று தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்திவிட்டு, அதிமுகஆட்சியில் ஏற்கெனவே போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களையும், இங்கே ஏற்கெனவே தொழில் செய்துவரும் நிறுவனங்களையும், மற்ற மாநிலங்களுக்குச் செல்லவிடாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, தொடர்ந்து அவர்கள் தமிழகத்திலேயே தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா