சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் கட்டிட திறப்பு, விருது வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகோண்டார். அதன்படி காவல் துறை சார்பில் 127 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 36 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 164 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை செ.நல்லசிவம், அ.சுப்பிரமணியன் மற்றும் சாதனா ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
இதனையடுத்து ஒன்றிய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ்.கெளரிசங்கர் ராஜாவின் மனைவி கொ.சிரிஷாவிடம் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளுக்கு உதவிப் பொறியாளர்கள், வேளாண் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 459 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.




