மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம், அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதையடுத்து, நினைவு இல்லத்திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜெ.தீபக் ஜெ.தீபா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து திறக்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே சமயம் மனுதாரர் முன்னிலையில் வேதா இல்லத்தில் உள்ள பொருட்களை கணக்கீடு செய்யவில்லை என்பதால் பொது மக்களின் பார்வைக்கு நினைவு இல்லத்தை திறந்துவிடக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வேதா நிலையத்தின் சாவியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும், எனவும் உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
இதனையடுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 10.30 மணி அளவில், திறந்து வைத்திடவுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிடப்பட்ட தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தையும், அதன் உள்ளே நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணிக்கு திறந்துவைக்கிறார்.