இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு இலங்கை அளித்த உறுதிமொழியை மீறிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், மனித உரிமை ஆணையத்தின் 46-வது கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு, இலங்கை தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை, பிரதமர் மோடி உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ஈழத்தமிழர்களின் கண்ணியத்தை நிலைநாட்டிடும் வகையில், நிர்வாக மற்றும் அரசியல் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதிலும் இலங்கை அரசு படுமோசமாகத் தோற்றுவிட்டது என்றும், ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு, பிரதமர் அளவிலும் – தூதரக அளவிலும் தக்க நடவடிக்கையை எடுத்திட வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் உடனடி முயற்சியும் – தலையீடும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







