இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும், அங்குள்ள மக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மார்ச் 31ஆம் தேதி அன்று ஏற்கெனவே அளித்த மனுவின் மூலம், இப்பிரச்சினையை பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 15ம் தேதி அன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலிலும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருட்களை வழங்குவதற்கு ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியிருந்ததாகவும், ஆனால், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கப் பெறவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதாகவும், இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள விபரத்தை முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற விவாதத்தின்போது, அவையில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளும், இலங்கையில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியப் பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்கிடுமாறு கோரியுள்ளதோடு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்கு இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.








