டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக கடந்த 30-ஆம் தேதி டெல்லி சென்றார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை நேற்று சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் தொடர்ச்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். அப்போது அண்ணா- கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடுகளை விடுவிப்பது, ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து, டெல்லி வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா பால வித்யாலயா அரசுப் பள்ளியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புத்தகங்களை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள் தொடர்பான காணொளியை கெஜ்ரிவாலுடன் இணைந்துப் பார்த்தார்.
அதனைத்தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலினிடம், மாணவர்கள் பல்வேறு செயல்திட்டங்களை விளக்கினர். மேலும், டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் குறித்தும், பள்ளிகளில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் உடனிருந்தார்.