பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

உடல் நலக்குறைவால் மரணமடைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், தமிழக எரிசக்தி துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்தவர் ஆவார்.

கடந்த சில நாட்களாக இவர் உடல்நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பீலா வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பீலா வெங்கடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.