முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்வதால் தமிழகத்திற்கு ஒன்றும் பயனில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பல்லவன் சாலையில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பல்லவன் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
முன்னதாக, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:
டிடிவி தினகரனுக்கு அதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பது கட்டாயம் இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்வதால் தமிழகத்திற்கு ஒன்றும் பயனில்லை. வேறு யாருக்காவது பிரயோஜனமாக இருக்கலாம். இன்று திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. தவிர காவல்துறை தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை. மத்திய அரசுக்கு இணங்கி செல்வதைத்தான் ஆளும் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.
போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தோம்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி மற்றும் பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும். போக்குவரத்து நிலைக் குழுவில் அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்க்காமல் அரசாணை வெளியிட்டது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறைக்கு பொற்காலமாக இருந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் ஜெயக்குமார்.








