சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. மாண்டல்…

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. மாண்டல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 210 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பஸ்கள் இயக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கம்போல் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள புறநகர் ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது, மேலும் சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும் எனவும் ரெயில் பயணிகளுக்கான உதவி எண்கள்,044-25330714; 044-25330952 தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வானிலை சூழ்நிலைக்கு ஏற்ப சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவது முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழை நேரத்தில் மணிக்கு 10 கி.மீ முதல் 15 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.