சென்னை மாநகராட்சி பள்ளியின் பொது தேர்வு விகிதம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, வாழ்க்கை நமக்கு வாய்ப்பை மட்டும் தான் தருகிறது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் காலம் தான் மாணவ பருவ காலம் என கூறினார். வன யானையை போல் வாழ்க்கையை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய ஒன்றிய மாநிலங்களில் எப்படி முதன்மையான முதலமைச்சர் என முக ஸ்டாலின் பெயர் எடுத்துள்ளாரோ அதுபோல் தமிழ்நாடு மாணவர்கள் பெயர் எடுக்க வேண்டும் என்றார்.
அடுத்ததாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி பள்ளியின் தேர்ச்சி விகித குறைவை சுட்டிக்காட்டினார். கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை
போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொது தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்றார். கடந்த ஆண்டை கணக்கில் எடுத்து கொள்ள முடியா விட்டாலும் மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்தி காட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.
– இரா.நம்பிராஜன்