சென்னையில், சாலைகள் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் நள்ளிரவில் ஆய்வு செய்தார்.
கடந்த நவம்பர் மாதம் பெய்த பருவமழையால், சென்னையில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்தன. அதை சீரமைக்கும் பணிகளும், புதிய சாலைகள் போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் இரவு ஊரடங்கில் நடைபெற்று வரும் புதிய சாலை பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆய்வு நடத்திய ககன்தீப் சிங் பேடி, சாலைகளின் உறுதி தன்மை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், சாலையின் நீளம், அளவு என அனைத்தும் சரியாக உள்ளதா என அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலை சீரமைப்பு பணிகளை இந்த ஜனவரி மாதத்திலேயே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சாலை போடும் பணியாளர்கள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளோம் என்றார் மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு சாலை பணிகளை கண்காணித்து வருவதாவும் அவர் தெரிவித்தார்.







