நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. இதனிடையே விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.
இதனிடையே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் தேமுதிகவினர் பேரணி நடத்தினர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள், தேமுதிக தொண்டர்கள் பங்கேற்றனர். பேரணியாக வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா அஞ்சலி செலுத்தினர்.







