சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மக்கள் பிரதிநிதியால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வரும் நடப்பு நிதி ஆண்டான 2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருக்குறள் வாசித்து தனது உரையை தொடங்கிய மேயர் பிரியா ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மேயர் வாசிக்க மாமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
இதையடுத்து கூட்டத்தில் சொத்து வரி குறித்து பேச வேண்டும் என்று கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள், பிறகு அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதன்பிறகு பேசிய மேயர் பிரியா ராஜன், மாநகராட்சியின் வருவாய் செலவினங்கள் குறித்து விளக்கினார். 2022-2023-ஆம் நிதியாண்டில் முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி வருவாய் 170 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாநில நிதிக்குழு மானிய வருவாய் 500 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2022-2023-ஆம் நிதியாண்டில் நிர்வாகச் செலவுக்கு 121 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மூலதன வரவானது 2 ஆயிரத்து 528 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.