சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை; 72 மணி நேரத்தில் மொத்தமாக மீட்ட போலீஸ்!

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகள், 72 மணி நேரத்தில் மொத்தமாகச் சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கடந்த 13-ஆம் தேதி அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள பெட் பேங்க்…

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகள், 72 மணி நேரத்தில் மொத்தமாகச் சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடந்த 13-ஆம் தேதி அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள பெட் பேங்க் கோல்டு லோன் வங்கியில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று ஊழியர்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கத்தி முனையில் கட்டிப்போட்டு 31.7 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. இந்த கொள்ளையில் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள் சூர்யா, பாலாஜி,சந்தோஷ் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை கும்பலைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (28), சந்தோஷ் (30) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட முருகன் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கொள்ளை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் இவர்களிடமிருந்து 8.5 கோடி மதிப்பிலான 18 கிலோ தங்க நகைகள், 2 நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு கொள்ளையனான சூர்யா என்பவரும் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகன் தங்களுடன் பயின்ற பள்ளி நண்பர்கள் மற்றும் ஜிம் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து பல நாட்களாகத் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக வங்கியிலிருந்து நகையைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் செல்வதற்காக சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் வெளியிலிருந்து மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

நகையைக் கொள்ளையடித்தவுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேட்டிற்குச் சென்று கார் மூலமாக பல்லாவரம் பகுதிக்குச் சென்று அங்கு ஒரு லாட்ஜில் நகையைப் பிரித்து உள்ளனர். குறிப்பாக லாட்ஜில் ஒரு கிலோ நகையை உருக்கும் போது அதிகப்படியான புகை வெளியேறியதால். கொள்ளையர்கள் பயந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அனைவரும் பிரிந்து விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிக்குச் சென்று பதுங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ள 14 கிலோ தங்க நகைகள் தொடர்பாக முக்கிய தலைவனான முருகனிடம் விசாரணை நடத்திய போது, சூர்யாவிடம் நகைகள் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யாவிடம் கேட்டபோது முருகனிடம் தான் நகைகள் இருப்பதாகக் கூறி காவல்துறையினரைக் குழப்ப முற்பட்டனர்.

இந்நிலையில், காவல்துறை கிடுக்கு பிடி விசாரணையில் விழுப்புரத்தில் உள்ள சூர்யாவின் நண்பர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார் விரைந்து விழுப்புரத்தில் நோக்கி சோதனை மேற்கொண்டதில் சுமார் 10 கிலோ தங்கம் பரிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்தது. அதன்பின்பு கணக்கீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை ஆய்வு செய்தபோது மொத்தமாக 13 கிலோ தங்க நகைகள் பிடிபட்டது தெரியவந்தது. மேலும், உருக்கப்பட்ட தங்கமான 700 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை அடிக்கப்பட்ட தங்கத்தை விற்க உதவிய கோயம்புத்தூர் நகைக்கடை நிர்வாகிகள் இரண்டு பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘காதல் விவகாரத்தில் தவறான முடிவு எடுக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீட்பு!’

மேலும், கொள்ளைச் சம்பவம் நடந்தபோது உடனடியாக அலாரம் அடிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன வங்கி ஊழியர்களுக்குத் தொடர்புடையதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொள்ளையன் முருகன் கூட்டாளிகளோடு வங்கிக்குள் நுழைந்த உடன் வங்கியில் உள்ள கட்டுப்பாட்டு அறை வெளி உலகத் தொடர்பு செய்ய முடியாதபடி அனைத்து வளர்களையும் துண்டித்து எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே அடித்து காட்சிகள் பதிவாகாதபடி இருக்க முயன்றுள்ளார். மேலும், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த எலக்ட்ரானிக் சாதனங்களை போரூர் பகுதியில் உள்ள கூவ ஆற்றில் வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக இரண்டு சாவிகளைப் பயன்படுத்தினால் மட்டுமே லாக்கரில் இருந்து நகைகளை எடுக்க முடியும். வேலை பார்க்கும் போது லாக்கரை அடிக்கடி கொள்ளையன் முருகனிடம் சாவி கொடுத்து நகைகளை எடுக்கச் சொல்வதை வழக்கமாக வைத்திருந்ததால்,நேரடியாகச் சென்று ஊழியர்களை மிரட்டி இரண்டு சாவிகளையும் பயன்படுத்தித் தங்க நகைகளைக் கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மீதி கொள்ளையர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த 72 மணி நேரத்தில் மொத்த நகைகளையும் மீட்டு, முக்கிய கொள்ளையனான முருகன் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்ததால் காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.