தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக சுற்றி வந்து கொண்டிருந்த போது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டனர்.15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் சிறுவர்கள்.
இந்நிலையில், விபத்து நடந்த களிமேடு கிராமத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்று விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஆய்வு நடத்தினார்.
இதனையடுத்து, தஞ்சை மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.