தமிழகத்தில் டெல்டா மற்றும் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலுர், திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதேபோல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்றப் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது.







