மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ புயல் தெற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுகுறைந்த புயலாக அதே பகுதியில் நிலவியது. இது குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து மேற்கு-தென் மேற்கில் 940 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும். இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







