மத்திய சுகாதார அமைச்சர் பதவி விலகி இருப்பது கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்திருப்பதையே காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் ஆகியோர் பதவி விலகி இருப்பது எதைக் காட்டுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழுத் தோல்வியை அடைந்திருப்பதையே அமைச்சர்களின் பதவி விலகல் காட்டுவதாகவும் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என நாள்தோறும் ஏன் பறைசாற்றினார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறித்தும் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களால் விமர்சிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







