அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. ஆனால், சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தி நாட்டின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய பணிகளில் சேர வேண்டும் என்று கனவோடு தன்னை தயார்ப்படுத்தி கொண்டு வந்த இளைஞர்களின் கனவை மத்தியில் அரசு உடைத்துள்ளது. மத்திய அரசு முதலில் ஒரே பதவி மற்றும் ஒரே ஓய்வூதியம் குறித்து பேசி வந்தனர். தற்போது பதவியும் இல்லை. பென்சனும் இல்லை என்று கூறுகின்றனர். இதேபோல் நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளை மத்திய அரசு ஒரு சில பெரிய நிறுவனங்களிடம் மொத்தமாக ஒப்படைத்துள்ளது என்று கூறினார்.
சீன ராணுவம் நமது மண்ணில் அமர்ந்துள்ளது. ஆனால், நமது ராணுவத்தை பலப்படுத்துவதை விட்டுவிட்டு மத்திய அரசு அதனை பலவீனப்படுத்தி நாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்று கொள்ளும் என நான் கூறினேன். அதேபோல் மத்திய அரசு விவசாய சட்டத்தை திரும்ப பெற்றது. தற்போது, அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறும் என காங்கிரஸ் கூறுகிறது. ஏனென்றால் இளைஞர்கள் அனைவரும் நமக்கு ஆதரவு தருகின்றனர். தேசத்தை வலுப்படுத்த உண்மையான தேசபக்தி தேவை என்பதை இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உணர்ந்துள்ளனர் என்று கூறினார்.
மேலும், அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளால் என்னை எதுவும் செய்யாது. அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய போது எனக்கு ஆதரவு அளித்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.








