பாலக்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை இரண்டுபேர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அனஸ், மனநோயால் பாதிக்கப்பட்ட இவர், பாலக்காடு நகர பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அனஸை வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த கிரிக்கெட் மட்டையால் அவரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, அவர்களே ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் விபத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி அனுமதித்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் அனஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமடைந்து அனுமதிக்கப்பட்டதால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மருத்துவமனையில் சேர்த்த இருவர் தான் அனசை அடித்து கொன்றது தெரியவந்தது.
மேலும் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த பிரோஸ் மற்றும் அவரது சகோதரர் என்றும் அதில் ஒருவர் காவலர் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, பட்டபகலில் அனிஸை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞரை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்