மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை பி.பி .அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரி கரை, கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இரண்டு முறை மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவிரி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம் அமைத்து பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்து 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் உபரி நீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையிலிருந்து 1.85 லட்சம் கன அடி நீர் திறந்து டப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. பவானி நகராட்சிக்குட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, தந்தை பெரியார் வீதி மற்றும் பாலக்கரை வீதி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.
இதேபோல் அம்மாபேட்டை கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியில் வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஆதவன் மாதவன் கோயவிலுக்குள் மழை நீர் புகுந்தது இதேபோல் கொடுமுடி பகுதியில் உள்ள இழுப்பு தோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. கொடுமுடி அடுத்த சத்திரம் பட்டியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் 9 முகாம்களில் 840-க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வருவாய் துறையினர் பொதுப்பணித்துறையினர் முகாமிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.







