பீகாரை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்!

பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது.  ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது.  அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே இந்தியா முழுவதும் இன்றளவும்…

பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. 

ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது.  அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே இந்தியா முழுவதும் இன்றளவும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.  இந்நிலையில்,  விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  1980,  1990-களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்தது.  தற்போதும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து,  கடந்த ஆண்டு பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது.  அண்மைகாலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் பீகார் ஆகும்.  இதையடுத்து பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவில் நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது.

இது குறித்து ஆந்திர மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா கூறியதாவது:-

சுதந்திரம் பெற்ற பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை.  மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே நடத்தப்படுகிறது.  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறாத சாதிகளுக்கும் உதவ முடியும். இது, அவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கும். முதலில், 139 பிற்படுத்தப்பட்ட சாதிகளை மட்டும் கணக்கெடுக்க திட்டமிட்டு இருந்தோம். இப்போது எல்லா சாதிகளையும் கணக்கெடுக்க உள்ளோம். கணக்கெடுப்பு பணியில் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு தன்னார்வலருக்கும் 50 வீடுகள் ஒதுக்கப்படும். அவர்கள் வீடு, வீடாக சென்று. சாதி விவரங்களை சேகரிப்பார்கள். அந்த தகவல்களை மாநிலம் முழுவதும் உள்ள கிராம செயலகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அங்குள்ள அதிகாரிகள் அதை சரிபார்த்து. தேவைப்பட்டால் திருத்தம் செய்வார்கள். அதன் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

19-ந் தேதி  முதல் 10 நாட்களில் ஒரே கட்டமாக இப்பணி முடிக்கப்படும். தேவைப்பட்டால், 4 அல்லது 5 நாட்கள் நீட்டிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, பிப்ரவரி 15-ந் தேதியோ அல்லது அதை ஒட்டியோ கணக்கெடுப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும். இந்த கணக்கெடுப்பு நியாயமானதாக, விரிவானதாக இருக்கும். நாடு முழுவதற்கும் முன்னுதாரணமாக அமையும் என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.