தமிழ்நாட்டில் ஜாதி ஒழிந்து விடவில்லை இன்னும் இருக்கிறது என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராய அரங்கில் திமுக சுற்று சூழல்
அணி சார்பில் கருத்தரங்கம் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திக், சிவ சேனாதிபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் தா.வேலு மற்றும் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., நாம் இன்று சமூக நீதியின் மற்றொரு பரிணாமத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஜாதி இன்னும் ஒழிந்து விடவில்லை. மற்ற மாநிலங்களில் சென்று கேட்டால் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்து சொல்வார்கள். தமிழ்நாட்டில் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போடுவதை ஒழித்தது திராவிட இயக்கங்கள் தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல ஐஏஎஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கும் பொழுது அவர்களது பெயரை அங்கு இருப்பவர்கள் கேட்பார்கள். அப்போது அவர்களை எங்கு பொருத்துவது என்று அவர்களுக்கு தெரியாது. நம்மை தமிழன் என்று எல்லோருக்கும் தெரியும். நம்மை ஒரு ஜாதிக்குள் அடைக்க முடியாது என்றார்.
ஜாதியை பெருமையுடன் வெளியே செல்வது அவமானம் என்ற நிலைக்கு தமிழர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அந்த சாதனயை செய்தது திராவிட ஆட்சி தான். இன்னும் நாம் அதிலிருந்து கடந்து வர வேண்டும். நம்மை பார்த்து எல்லா மாநிலங்களும், மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் காலை உணவு திட்டத்தை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் பெண் பிறந்தால் திருமணம் செய்து வைக்க வேண்டும். அவர்கள் நினைப்பவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் உச்சபட்ச கடமை. பெண்கள் படித்தால் போதும். 10ம் வகுப்பு ஆவது படித்து விட வேண்டும் என்று திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார்.
காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. காலநிலை மாற்றத்தின் அபாயத்தை புரிந்து கொண்டு அரசு தன் செயல்பாடுகளை முன்னெடுத்து வைத்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் எல்லா உணவுகளிலும் உள்ளது. தாய் பாலில் கூட பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளது என்ற செய்தியை பார்க்கிறோம். அந்த அளவுக்கு நம் நிலை இருக்கிறது. அதற்காக தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டுவரப்பட்டது. இது மட்டும் போதாது. சுற்று சூழல் அணி முன்னெடுக்க வேண்டிய செயல்கள் நிறைய இருக்கிறது.
நிறுவன கழிவுகள், சிறிய சிறிய செயல்கள் மூலம் சுற்று சூழலுக்கு பாதிப்பை
ஏற்படுத்தி வருகிறார்கள். இன்று நமது குழந்தைகளுக்கு நிறையை விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்களுக்கு இந்த உலகதையாவது விட்டு செல்வோம். நிறைய இளைஞர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று எங்களுக்கு இருக்குமா இல்லையா என்ற பயம் இருக்கிறது என்று கூறினார்.







