தவெக அரசு மீதான குதிரை பேர புகார் குறித்த வழக்கு தள்ளுபடி…!

தவெக அரசு குதிரை பேரம் நடத்தியதாகவும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. மேலும் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் 144 வாக்குகளை பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேரம் நடத்தியதாகவும், ரூ.1000 கோடி வரை கையாடல் நடந்ததாகவும் குற்றம் சாட்டி, இதுகுறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், மோகனா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தை அரசியல் சாசன பிரிவு 32 கீழ் பொதுநல வழக்காக கருத முடியாது. எனவே நேரடியாக உச்சநீதிமன்றம் இந்த தரவை விசாரிக்க முடியாது” என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.