சி.பி.எஸ்.இ வாரியம் அண்மையில் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, வரும் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள புதிய கல்வி அமர்வில், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்களது பாடத்திட்டத்தில் கட்டாயமாக மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான முன்னணி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அவசர வழக்காகக் கொண்டு வந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முன்வைத்த முதன்மையான வாதங்கள், ஒன்பதாம் வகுப்பில் திடீரென மேலும் இரண்டு கூடுதல் மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கூறுவது மாணவர்களின் கல்விச் சுமையை அநியாயமாக அதிகரிக்கும் செயல். 9-ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள், அடுத்த ஆண்டே 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய சூழலில், திடீரென கூடுதல் மொழிகளைப் படிக்கக் கட்டாயப்படுத்துவது கல்விச் சூழலில் மிகப்பெரிய குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும்”. இந்த விதிகள் வரும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வரவுள்ளதால், இந்த மனுவை நீதிமன்றம் உடனடியாக விசாரித்து இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மனுதாரர்கள் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்த விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியிருப்பதால், வழக்கை அவசரமாகப் பட்டியலிட ஒப்புக்கொண்டார்.
அதன்படி, சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கைக்கு எதிரான இந்த மனு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அறிவித்துள்ளது.







